எழுந்துவா இளைய ஞாயிறே!

இன்று வெட்டிக்கொள்ளும்
வெவ்வேறு சாதிக்காரர்களும்
அன்று மனிதர்களாய் இருந்தபோது
தோளோடு தோள்கொடுத்து
நிமிர்ந்து நின்ற
'மனிதத்தேரை'
மகிழ்ச்சியோடு இழுத்தவர்கள் தான்.
தொழில்கள் காரணமாய்
தென்றலாய்ப் புகுந்த சாதி..
மெது மெதுவே முறுகேறி
மென்னி முறிக்கும்புயலாய் இன்று.

அன்றைய அரிவாள் கதிரறுக்க
இன்றோ கழுத்தறுக்க.

மட்டம் தட்டிப் பேசுவதும்
இருந்தது அன்று வேடிக்கையாய்,
வட்டம் கட்டிப் பேசுவர்
இன்று வெறித்தனமாய்.

அத்தணையும்
பணத்திமிர்,
சாதி வெறி.

வார்த்தைகளில் பூத்தூவிய
வசந்தகாலங்கள்
கோடையானது.
குருதி கொப்பளிக்கும்
இன்றுஅக்னி நட்சத்திரம்.

மனதிற்குள் வெறுப்பு உண்டு
சாதியை வெட்டி எறிய
ஒவ்வொருவருக்கும்,

பழமைகள் அணைபோடுவதால்
தேங்கின எண்ணங்கள்.

அழுத்தம் அதிகமாக்கி
அணையை உடைத்து
எண்ண ஞாயிறே!
எழுந்துவா இச்சிறுமை கண்டு.

இனி பகல் தான்
என்றும் எப்போதும்..
இச்சாதிவெறியும் சாதியும்
ஒழிந்தபின் தான்
காலை, மாலைகள் என
உறுதிகொண்டு
எழுந்துவா இளைய ஞாயிறே!
-------------------------------------------------

15.9.95 அன்று கோவை வானொலியில்
ஒளிபரப்பான எனது கவிதை.

1 மறுமொழிகள்:

Mohan Madwachar said...

அருமையான கவிதை
http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்று
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com