பெயர்

எல்லா கவிஞர்களும்
எழுதிவிட்டார்கள்
காதலைப்பற்றி.

நான் மட்டும் என்ன செய்ய?

எழுதினேன்.

உன் பெயரை.

ஏன்?

உதிப்பதிலும்
மறைவதிலும்
அழகாய்த்தானிருக்கிறாய்
ஆதவனே!
மதியம் மட்டும்
ஏன்
அந்தக் காய் காய்கிறாய்?

ம்..~?!

அன்பே!
நாமிருவரும்
ஒரே நொடியில்
இறந்தோமே...

அதைப்பற்றி
இவர்கள்
என்ன பேசிக்கொள்வார்கள்?

உதிரிபூக்கள்

நான் கொடுத்த
எல்லாக் கடிதங்களையும்
கிழித்தெரிந்தாய் நீ.
அத்தனையும்
உதிரிப்பூக்களாய்
உன் காலடியில்.

எனக்கு நிம்மதி.

இனி உன் கால்கள்
இந்த பூக்களின் மேல் அல்லவா
நடந்து செல்லும்.

மகனே...????

முந்நாள்
பட்ட காயங்கள்
இந்நாள்
வலியிருக்கும்.

இந்நாள்
வடுக்கள்...

பின் ஆளுக்கு
நினைவிருக்குமா?

யார்..?

முதலில்
காதலை சொன்னது
நீயா?.. நானா?..
என்றெல்லாம் தெரியாது.

எனக்கு தெரிந்ததெல்லாம்
"நாம் காதலிக்கிறோம்".

வலம்

"உன்னைச்
சுற்றியே
என் உலகம்" - என்றேன்,
நீயோ
என்னையே
சுற்றி சுற்றி வருகிறாய்!

படைப்பு

அத்துணை அழகுகளையும்
படைத்துவிட்டு
திருப்திப்படாததால்
உன்னைப் படைத்தான்
பிரம்மன்.

ஏய் செல்லம்..

"முடியாது" என்று மறுத்தாய்,
"மாட்டேன்" என்று அடம்பிடித்தாய்,
"வீட்டில் சொல்லி உன்னை மாட்டிவிடுகிறேன் பார்" என மிரட்டினாய்,
ஆனாலும் உன் சகோதரர்களை என் நண்பர்களாக்கினாய்,
பெற்றோரை அத்தை, மாமா என்று அழைக்க சொன்னாய்...
வீடு வரை... நீ வா... உன் காதல் வரக்கூடாதென்று கட்டளையிட்டாய்...
இன்னும் பல ஜாலங்கள் செய்தாய்...
ஆனாலும்
துரத்தித் துரத்தி என்னை காதலிக்கவைத்து... பின்
என்னை நீ கல்யாணம் கட்டிக்கொண்டாய்.

அடிப்போடி..

வெட்கமாயிருக்கிறது
எனக்கு
எப்படி
ஒரு கவிதையைப்
பற்றியே
கவிதை
படைப்பது!!

காதல் அனுமதி

நன்றி: தபு சங்கர்.
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பர்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன். 'அய்யோ பாவம்!' என்றார் அப்பா. 'ஏம்ப்பா..?' டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!

ரகசியம்

எனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியத்தை
அறிய வந்த
வண்ணத்துப்பூச்சி,
உன் வெட்கத்தால்
எப்படி சிவந்துபோயிருக்கிறது
பார்.

வானவில்

தன்னிடமில்லாத
உன் கூந்தல் நிறத்தை
நாணல் கொண்டு
எழுதுகிறது பார்
இந்த வானவில்.

அன்பருவி

இப்படி
உன் அன்பை அருவியாய்க் கொட்டி..
வருடி வருடியே..
கல்லாய் என்னை
சமைத்து
வைத்திருக்கிறாய்
நீ.

எனது பேனா


எதை எழுதினாலும்
கிறுக்கலாய் எழுதிவிட்டு
உன் பெயரை மட்டும்
மிக அழகாய் எழுதுகிறதே!
என் பேனா!

காத்திருப்பு

இந்தப் பிறவி வரை
காத்திருந்து
பெற்றோம்
காதலெனும்
நம் குழந்தையை !

துவாரவாசல்

என் இதயத்தில்
துவாரம் இருப்பதாய்
கண்டுபிடித்தார்கள்...
அது
நீ நுழைந்த வழியென்று
இவர்களுக்கு
தெரியவில்லை போலும்.

இன்சுலின்

சர்க்கரை நோய்
உங்களுக்கும் வரலாமென்று
வைத்தியர் சொன்னார்.
நல்ல வேளை
நீ வந்துசேர்ந்தாய்.
சர்க்கரை நோய்
வருவதற்கான வாய்ப்பில்லை.

விக்கல்

எனக்கு
விக்கல் வரும்போதெல்லாம்
உன்னைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

விக்கல் வருவது கூட
நீ நினைப்பதால் தான் என்றால்
கண்ணே...

எப்பொழுதாவது தானா
என்னை நினைத்துக் கொள்கிறாய் !!

கோபம்

என் மேல்
தீராத கோபமென்றால்
என் இதயத்தை
உன்னிடம் தருகின்றேன்,
முற்களால்
குத்திப்பார்த்து
உன்
கோபம் தணித்துக்கொள்.

உன் மலர்க்கைகளில்
இரத்தக்கறை
படிந்துவிட்டால்...
என்னிடம் சொல்.
துடைத்துவிடுகிறேன்.

நிறம்

உன் இதயத்தின் நிறத்தை
ஆராய்ந்த பொழுது
என்
கண்ணீரின் நிறம்
சிவப்பாகிப் போனது.

விடுதலை எப்போது!

(தேன்கூடு போட்டிக்கவிதை)
-------------------------------------
அவனைக் காண வேண்டும்.
சே.. என்ன இரவு,
நீண்ட இரவாக உள்ளதே!
அடடா!
பொழுது விடியும்போது
எல்லோரும்
காணத் துடிக்கும் அவனை
அந்த இளஞ்சூரியனை
நான் காண வேண்டும்.
நினைக்கும் போதே இதமாயிருந்தது.
தூங்கிவிட்டேன்.
காலை வந்துவிட்டதாம்.
சேவல் கூவியதும் எழுந்தேன்.
தட்டுத் தடுமாறி
அவனது அழகிய முகத்தில் விழிக்க
கண்களை மூடிக்கொண்டு சென்றேன்.
வெளியே வந்துவிட்டது போல் உணர்வு.
தலையை நிமிர்த்தி
கண்களை அகலத்திறந்தேன்.
ஒன்றுமே தெரியவில்லை.
எல்லாமே இருள்.
ஞாபகம் வந்தது..
நான் குருடன் என்று.

எப்படி!

எனது காதலில்
கொஞ்சம் ஆணாதிக்கம்
கலந்துவிட்டது இப்போது.
ஆனால்
நீ மட்டும் எப்படி
நிறம் மாறாமல்
காதலித்துக் கொண்டிருக்கிறாய்...!

பிரிய எதிரிகளே!

எனது
ஆயுதத்தை
தீர்மானித்தது
நீங்கள்தான்
எனது
பிரிய எதிரிகளே!

எண்ணம்


பிறப்பு

ஒவ்வொரு பெண்ணும்
பிறக்கும்போதே
375 கருமுட்டைகளுடன்
பிறக்கிறாளாம்.

நானும் பிறந்தேன்..
உன்னை மட்டுமே
நெஞ்சினுள் தாங்கி.

கனவில் நீ

நேற்று
என் கனவில்
நீ வந்தாய்.
வாசற் கதவைத் திறந்து
"உள்ளே வா" என்றேன்
மகிழ்ச்சிப் பெருக்கோடு.
கனவில் கூட
என்னைக்
காணக்கூடாது என
எச்சரிக்கத்தான் வந்தேன்
என்று சொல்லி சென்றுவிட்டாய்.
கனவில் கூட
கல்நெஞ்சமடி உனக்கு

ளொள்ளு கவிதை-1

நண்பனின் காதலுக்கு
துணை சென்றேன்.
நண்பனின் காதலும்
நன்றாய்தானிருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு
நண்பனின் காதலி
என்னிடம் சொன்னாள்
"ஐ லவ் யூ".

கண்ணம்மா!

நீ
கண்ணணாகப்
பிறப்பதாயிருந்தால்
நான்
கம்சனாகப் பிறக்கவே
ஆசைப்படுவேன்.
அப்போது தானே
நீ என் நெஞ்சு பிளப்பாய்!

ஆம்
உன்
கைகளால் இறப்பதையே
பெருமையாய் நினைக்கிறேன்.

இப்போது நடைபிணமாய்
இருப்பதைக் காட்டிலும்.

போதி மரம்

மனிதா!
இன்னும் நீ ஏன் உணரவில்லை
உனக்கு நீதான் போதி மரமென்று!

நீ சித்தார்த்தனாகவே இரு,
புத்தனாக வேண்டிய கட்டாயமில்லை.

நீ கௌசிகனாகவே இரு,
விசுவாமித்திரனாக வேண்டிய அவசியமில்லை.

நீ உன்னையிழந்து
செய்யும் செயல்களிலெல்லாம்..
உனக்கு நீயே போதி மரமாவாய்.

நீ சுயநலவாதியாய் இருப்பின்,
உனது அழிவே உனக்கு போதி மரம்.

நீ பேராசைக்காரனாய் இருப்பின்,
உனது இழப்பே உனக்கு போதி மரம்.

நீ கொள்ளையனாய் இருப்பின்,
உன் மன உறுத்தல்களே உனக்கு போதி மரம்.

நீ ஊதாரியாய் இருப்பின்,
உன் நோயே உனக்கு போதி மரம்.

ஆம்.

செய்யப்போகும் செயல்களுக்கு
நீ எஜமானி.

செய்த செயல்கள்
உனக்கு எஜமானி.

ரசிப்பு

பல் பிடுங்கப்பட்ட
பாம்புடன் நடித்தார்
சிரிப்பு நடிகர்.
32 பற்களும் தெரிய
சிரித்தனர்
ரசிகர்கள்.

சண்டை

அடிபிடி
சண்டை எதற்கு
நாய்களே
மனிதர்களைப் போல்
வௌ..வௌ..வௌ..

நன்றி:குஞ்ஞுண்ணி கவிதைகள்.

தவம்

என் கண்கள்
எப்போதும்
உன்னை நோக்கியே
இருக்கின்றனவே...
வடக்கு நோக்கியே
தவம் கிடக்கும்
காந்த ஊசியைப்போல்.

குறிஞ்சி பூ

உன்னுடன்
பேசியபோது தான்
தெரிந்தது
நீ
பதினைந்து ஆண்டுகளில்
பூத்த
கன்னிப்பூ
என்று.