தொலைந்து போனவன்

காணாமல் போயிருந்தபோது
நீதான் கண்டுபிடித்தாய் 
உனக்குள் இருந்த என்னை.

ம்

காதலாக 
ஒரு "ம்..."-ல்
முடிக்கிறாய் ஊடலை.
தொடங்குகிறது 
என் கவிதை.

கவிதைச்செடி

சொற்களாய் 
பூத்தபோது தான் தெரிந்தது 
என்னை 
அறியாமலே 
வளர்த்திருக்கிறேன் 
கவிதைச் செடிகளை 

கவிதை எழுதினேனா!!

உன்னை
நினைத்துப் பார்த்து
கவிதைகள் எழுத..
நான்
கவிதை எழுதவில்லை...
உன்னையே தான்
எழுதுகிறேன்.

ஆட்டத்தில் இல்லாத காய்கள்...

அந்த சதுரங்க ஆட்டத்தில்
சிப்பாய்கள் நகரத்துவங்கினார்கள்
யானைகள் அங்கும் இங்கும் ஓடத்துவங்கின
தேர்தல் தேர்கள் வலம் வர
நாட்கள் குறிக்கப்பட்டும்
நகராமல் இருக்க ஆவன செய்யபட்டது
நீதியின் மொழி கொண்டு நகரச்செய்தாலும்
ஊழல் கரம் கொண்டு
முட்டுக்கட்டையிடப்பட்டது.
வெள்ளை அணியில் கருப்பு காய்கள் இருப்பதாகவும்
கருப்பு அணியில் வெள்ளை காய்கள் இருப்பதாகவும்
அறிவித்துக் கொண்டார்கள்.
ஆட்டத்தை முடித்துவைக்க
விளையாட்டை வேடிக்கை பார்ப்பவர்கள் ஊனமாக்கப்பட்டனர்
கேள்வி எழுப்பியவர்கள் காயடிக்கப்பட்டனர்.
இருவர் அல்லாது ஒருவரே ஆடுவது போல் தெரிகிறது...
நாம் இந்த ஆட்டத்தில் இல்லாத காய்களால் சூழப்பட்டுள்ளது மெதுவாக புரிபடுகிறது.