தாலாட்டு-1

ஆராரோ ஆராரோ கண்ணே நீ ஆரீரரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுக கண்ணே உனை
அடித்தவரை சொல்லி அழு
பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே உனக்குப்
பரமசிவன் கொடுத்தமெத்தை
அக்கா கொடுத்த மெத்தை கண்ணே
உனக்கு அழகான தங்கமெத்தை
மேலு வலிக்காம கண்ணே நீ
மெத்தையிலே படுத்துறங்கு
மானே மருக்கொழுந்தே கண்ணே நீ
மலர்விரிந்த மல்லியப்பூ
கரும்புசிலையானோ கண்ணே நீ
கந்தனுக்கே நாயகனோ?
சீதைக்கு அதிபதியோ கண்ணே நீ
சிங்கார ராமபிரான்தானோ?
வட்டக்கலசலத்திலே கண்ணே நீ
வாய் நிரம்பப்பால் குடிச்சி
வாகான தொட்டிலிலே கண்ணே நீ
வச்சிரம்போல் தூங்கிடய்யா...